‘இருமுடி கட்டு’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
https://youtu.be/TaBNA7bv0K8?si=fPRluboX7SEYiOHn
‘இருமுடி கட்டு’ ஐயப்ப பக்தி கிரைம் திரில்லர் சமூக பிரச்சனை மற்றும் மாஸ் ஆக்ஷன் ஆகியவற்றை கலந்து சொல்லியிருக்கும் படம். ரவி தேஜா பிரியா பவானி சங்கர் மற்றும் சிறுமி நக்ஷத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கிராமத்தில் மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் ரவி தேஜா விவசாயம் மற்றும் விளைபொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாலும் ஐயப்பன் மீது தீவிரமான பக்தி கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் 41 நாட்கள் ஐயப்ப விரதம் இருந்து மாலை அணிந்து சபரிமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். நீண்ட காலத்திற்கு பிறகு ஐயப்பனை வேண்டி பிறந்த குழந்தை என்பதால் தனது மகள் மீது உயிருக்கு மேலாக பாசம் வைத்திருக்கிறார்.
தனது மகளை மட்டும் இல்லாமல் ஊரில் இருக்கும் அனைத்து பெண் குழந்தைகளையும் தன் மகள்களைப் போலவே பார்க்கும் குணம் ரவி தேஜாவுக்கு இருக்கிறது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் பெண்கள் பயப்படாமல் தைரியமாக அதை வெளியில் சொல்ல வேண்டும் என்று தனது மகளையும் வளர்க்கிறார்.
இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் சில மாணவிகளுக்கு எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஒரு மாணவி மர்மமான முறையில் இறக்கிறார். மற்றொரு மாணவி காணாமல் போகிறார். சிறப்பு வகுப்பு என்ற பெயரில் சில மாணவிகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியை சுவாசிகாவை சுற்றியும் சந்தேகம் ஏற்படுகிறது. மாணவிகளுக்கு நடக்கும் இந்த சம்பவங்களின் பின்னணி பற்றி ரவி தேஜாவின் மகள் தெரிந்து கொள்கிறாள்.
இந்த விஷயத்தை தந்தையிடம் சொல்லி மாணவிகளை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் ரவி தேஜாவின் மது பழக்கம் மற்றும் ஐயப்ப விரதம் ஆகியவை அந்த உண்மையை உடனடியாக அவரிடம் கொண்டு சேர்ப்பதற்கு தடையாக இருக்கின்றன. ஒரு கட்டத்தில் தனது மகளும் ஆபத்தில் சிக்கும்போது உண்மையை தெரிந்து கொள்ளும் ரவி தேஜா எப்படி விஸ்வரூபம் எடுக்கிறார் என்பதுதான் படத்தின் முக்கியமான பகுதி.
ரவி தேஜா இந்த படத்தில் வழக்கமான மாஸ் ஹீரோ பாணியை சற்று குறைத்துக்கொண்டு ஒரு சாதாரண கிராமத்து தந்தையாக நடித்திருக்கிறார். மகளுடன் இருக்கும் காட்சிகளில் மிகவும் இயல்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நடித்திருக்கிறார். மகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் பதறிப்போகும் தந்தையாகவும் பெண்களுக்கு எதிரான அநீதியை பார்த்தால் கோபமாகும் மனிதராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்பில் வரும் மாற்றமும் கிளைமாக்ஸ் காட்சிகளில் காட்டும் மாஸும் ரசிக்க வைக்கிறது.
பேபி நக்ஷத்ரா இந்த படத்தின் முக்கியமான பலமாக இருக்கிறார். அப்பா மீது வைத்திருக்கும் பாசம் பயம் பதற்றம் என பல உணர்வுகளை முகபாவனைகளிலேயே நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரவி தேஜாவுடன் வரும் காட்சிகளில் இருவருக்கும் இடையிலான பாசம் நன்றாக வேலை செய்கிறது. பல இடங்களில் படத்தின் உணர்ச்சியை நக்ஷத்ராவின் நடிப்புதான் தாங்கி நிற்கிறது.
பிரியா பவானி சங்கர் குடும்பத் தலைவியாகவும் அன்பான மனைவியாகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அவருக்கு அதிகமான காட்சிகள் இல்லாவிட்டாலும் கிடைத்த காட்சிகளில் கதைக்கு தேவையான உணர்வை கொடுத்திருக்கிறார்.
சாய் குமார் குருசாமி கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார். ரவி தேஜாவின் கதாபாத்திரத்திற்கு மாறுபட்ட சிந்தனையுடன் இருக்கும் ஒரு தந்தையாக அவரது கதாபாத்திரம் அமைந்திருப்பது கவனிக்க வைக்கிறது. அஜய் கோஷ் ரமேஷ் இந்திரா சுவாசிகா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக சுவாசிகா வரும் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.
விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு படத்தின் கிராமத்து சூழலை அழகாக காட்டுகிறது. இயற்கையான காட்சிகளையும் குடும்ப உணர்வுகளையும் திரில்லர் காட்சிகளையும் வேறு வேறு மனநிலையுடன் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் பதற்றமான காட்சிகளில் கேமரா வேலை படத்திற்கு நல்ல பலம்.
ஜி வி பிரகாஷ் குமாரின் இசை படத்தின் உணர்ச்சிகளுக்கு பக்கபலமாக இருக்கிறது. ஐயப்ப பக்தி பாடல்கள் கதையுடன் இயல்பாக இணைக்கப்பட்டுள்ளன. பின்னணி இசை தந்தை மகள் பாசம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு தேவையான தாக்கத்தை கொடுக்கிறது.
பிரவீன் புடியின் படத்தொகுப்பு முதல் பாதியில் அமைதியான குடும்ப சூழலில் இருந்து இரண்டாம் பாதியில் வேகமான திரில்லர் பகுதிக்கு படத்தை சரியாக கொண்டு செல்கிறது. தேவையான இடங்களில் வேகத்தை கூட்டி முக்கியமான திருப்பங்களை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் சிவா நிர்வாணாவின் மிகப்பெரிய பலம் எளிமையான கதையை உணர்ச்சியுடன் சொல்லியிருப்பதுதான். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பெற்றோர்கள் அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதுடன் ஒரு தந்தையின் மகள் மீதான பாசத்தையும் இணைத்திருக்கிறார். முதல் பாதியில் படம் சற்று மெதுவாக நகர்ந்தாலும் கதாபாத்திரங்களையும் குடும்ப சூழலையும் அமைக்க அந்த பகுதி உதவுகிறது.
இரண்டாம் பாதியில் படம் வேகம் எடுக்கிறது. மாணவிகளுக்கு நடக்கும் சம்பவங்களின் பின்னணி மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸை நோக்கி வரும் திருப்பங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. சில விஷயங்கள் முன்கூட்டியே கணிக்கக்கூடியதாக இருந்தாலும் தந்தை மகள் பாசம் மற்றும் ரவி தேஜாவின் நடிப்பு அந்த குறைகளை பெரிதாக தெரியாமல் செய்கிறது.
மது பழக்கம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் ஆன்மீகம் என்ற பெயரில் சிலர் உருவாக்கிக்கொள்ளும் தவறான புரிதல்கள் பற்றியும் படம் சில இடங்களில் பேசுகிறது. அதே நேரத்தில் பெண் குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் தவறுகளை பயப்படாமல் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்ற முக்கியமான கருத்தையும் முன்வைக்கிறது.
மொத்தத்தில், ‘இருமுடி கட்டு’ தந்தை மகள் பாசத்தை விரும்பும் குடும்ப ரசிகர்களுக்கு இருமுடி கட்டு ஒரு உணர்ச்சிப்பூர்வமான திரில்லர் அனுபவமாக இருக்கும்.


















