‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்பட ரேட்டிங்:2.5/5
https://youtu.be/n65bXlvrHlo?si=1bs9mWpM9sEWJOBW
‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தில் காதலை ரசிக்கும்படி கொடுத்த இளன் இந்த படத்தில் திருமண வாழ்க்கையில் இருக்கும் சில சமூக பிரச்சனைகளை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.
இளனும் சான்வி மேக்னாவும் காதலித்து இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே சான்வி மேக்னா மணக்கோலத்திலேயே மண்டபத்தை விட்டு ஓடி விடுகிறார். கணவன் வீட்டுக்கு சென்று வாழ விருப்பம் இல்லாமல் தனது பெற்றோரையும் வீட்டையும் விட்டு பிரிய முடியாது என்று கூறுகிறார். திருமணம் முடிந்த பிறகு பெண் மட்டும் ஏன் கணவன் வீட்டுக்கு செல்ல வேண்டும் கணவரும் மனைவி வீட்டில் வந்து வாழலாம் என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளன் பின்னர் மனைவியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு அவரது வீட்டிலேயே தங்குகிறார். வேலை இல்லாமல் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழும் இளன் மாமியார் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் மரியாதை குறைவுகளை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் முக்கிய கதை.
படத்தின் முதல் பாதி காதல் காட்சிகளாலும் இளன் மற்றும் சான்வி மேக்னாவின் ஜோடி கெமிஸ்ட்ரியாலும் ரசிக்க வைக்கிறது. சமூக வலைதளங்களில் ஒரு விஷயம் எப்படி வேகமாக பரவுகிறது அதற்கு மக்கள் எப்படி விதவிதமாக கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார்கள். இளனின் துள்ளலான நடிப்பும் இந்த பகுதிக்கு பலம் சேர்க்கிறது.
இரண்டாம் பாதியில் திருமண வாழ்க்கை மற்றும் மாமியார் வீட்டில் வசிக்கும் மருமகனின் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை நகர்கிறது. பெண்கள் திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் சில சிக்கல்களை ஆண்கள் எதிர்கொண்டால் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையாக காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த கருத்தை இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கலாம். சில காட்சிகள் கருத்தை சொல்லாமல் வெறும் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டிருப்பது போல தெரிகிறது.
இளன் ஹீரோவாக நல்ல முயற்சி செய்திருக்கிறார். பொறுப்பில்லாத மகன் காதலன் மற்றும் மாமியார் வீட்டில் வசிக்கும் மருமகன் என வெவ்வேறு நிலைகளில் இயல்பாக நடித்திருக்கிறார். நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகளில் அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் உணர்ச்சிகரமான சில காட்சிகளில் இன்னும் அனுபவம் தேவைப்படுவது தெரிகிறது.
சான்வி மேக்னா நாயகியாக நன்றாக நடித்திருக்கிறார். நவீன சிந்தனை கொண்ட பெண்ணாகவும் தன்னுடைய குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட பெண்ணாகவும் கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ராதிகா சரத்குமார் தனது அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். எம் எஸ் பாஸ்கர் வழக்கம்போல தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். செந்தில் கீதா கைலாசம் இளங்கோ குமரவேல் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்திருக்கிறார்கள். யோகி பாபு வரும் சில காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.
தினேஷ் கே பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். வண்ணமயமான காட்சிகள் மற்றும் அழகான கேமரா கோணங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன. பெரும்பாலான காட்சிகள் குறைந்த இடங்களிலேயே நடந்தாலும் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது. பிரதீப் இ ராகவின் படத்தொகுப்பு முதல் பாதியில் விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் சில இடங்களில் தொய்வு தெரிகிறது.
படத்தின் முக்கியமான பலம் அதன் கதைக்கரு. திருமணத்திற்கு பிறகு பெண்கள் மட்டும் தங்கள் வீட்டையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற சமூக நடைமுறையை கேள்வி கேட்பது நல்ல முயற்சி. கணவன் மனைவி இருவருக்கும் சம உரிமையும் சம பொறுப்பும் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் படம் முன்வைக்கிறது.
ஆனால் இந்த நல்ல கருத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் திரைக்கதை சில இடங்களில் தடுமாறுகிறது. சமூக விமர்சனத்தையும் நகைச்சுவையையும் சரியான அளவில் கலந்து கொடுக்க முடியாதது படத்தின் பெரிய குறையாக தெரிகிறது. சில மீம்கள் மற்றும் சினிமா தொடர்பான காட்சிகள் செயற்கையாக சேர்க்கப்பட்டிருப்பது போலவும் தோன்றுகிறது.
மொத்தத்தில், ‘பியார் பிரேமா கல்யாணம்’ சொல்ல வந்த கருத்தை இன்னும் அழுத்தமாகவும் இயல்பாகவும் சொல்லியிருந்தால் பியார் பிரேமா கல்யாணம் இன்னும் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.

























