‘காடுவெட்டி’ திரைப்பட ரேட்டிங்: 1/5
Casting : RK Suresh, Sangeerthana Vipin, Jayam SK Gopi, Aadhira Pandilakshmi, Aadukalam Murugadoss, Vismaya Viswanth, Santhi Mani, Subramaniam Shiva, Akilan
Directed By : Solai Arumugam
Music By : Vanakkam Tamizha Sadikq
Produced By : Solai Arumugam, N. Subash Chandrabose, N. Mahendran
திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் சோலை ஆறுமுகம் இணை தயாரிப்பாளராக இருந்து இயக்கி, மார்ச் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் காடுவெட்டி நடுநாட்டுக்கதை. இந்த படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காணலாம். இந்த படத்தினை மஞ்சள் ஸ்கீரீன்ஸ் வெளியிட்டுள்ளது.
படத்தில் நகரத்தில் காதலை மக்கள் எவ்வாறு அணுகுகின்றனர், கிராமத்தில் எவ்வாறு அணுகின்றனர் என்பதை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள மக்களுக்கு போதுமான கல்வி அறிவும் பொருளாதார மேம்பாடும் இருப்பதால் நகரத்தில் பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்கின்றனர் எனக் கூறி நகரத்து காதல் கதையை முடிக்கின்றார்.
ஆனால் கிராமத்து காதல் கதையில் காதலர்கள் எதிர்கொள்ளும் சிக்கல், காதலர்களின் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை விளக்க முயற்சிக்கின்றார். குறிப்பாக நகரத்து காதல் கதையில் பெற்றோர்கள் மட்டும் கலந்து பேசி தங்களது குழந்தைகளின் காதல் திருமணத்தில் முடிய பக்கபலமாக நிற்கின்றனர். ஆனால் கிராமத்து காதல் கதையில், காதலுக்கும் காதலர்களுக்கும் சம்பந்தமில்லாத ஊர்கார்களால் அந்த காதலும் காதல் செய்யும் பெண்ணின் குடும்பமும் எவ்வாறு சிரமங்களை எதிர்கொள்கின்றது என்பதை காட்ட முயல்கின்றது.
படத்தின் கதாநாயகனான சுரேஷ் தான் சார்ந்த சமூகத்தில் நடைபெறும் பிரச்னைகளை தீர்க்கும் நபராக வருகின்றார். சுரேஷின் அறிமுக காட்சியே லாஜிக் இடிக்கின்றது. குறிப்பாக காதல் திருமணம் செய்து அவதிப்படும் ஒரு பெண்ணை அழைத்து வருவதற்கான காரணமும், அவர் நடந்துகொள்வதைப் போல் வெளியில் காட்டிக் கொள்ளும் காரணமும் ’சகிக்கல’. இதுமட்டும் இல்லாமல் அவரது சமூகத்தை சார்ந்தவருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்தார் எனக் கூறி ஒரு காட்சி வருகின்றது.
சாதிச் சங்கத் தலைவராக இருக்கும் ஆர்.கே. சுரேஷால் எப்படி அரசு வேலை வாங்கித் தரமுடியும் என்ற கேள்வி எழாமல் இல்லை. படத்தில் நாடகக் காதல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் நாடகக் காதல் என சொல்லப்படுகின்ற ”புளித்த மாவை” மீண்டும் ஒருமுறை அரைத்துள்ளது காடுவெட்டி படக்குழு. சென்சார் போர்ட் பல இடங்களில் வசனங்களை மீயூட் செய்தும் சில இடங்களில் வசனங்களை கட் செய்தும் உள்ளது. இது படக்குழுவுக்கு ஒருவகையில் உதவிதான். படத்தின் பல வசனங்கள், “ யெப்பா முடியல” மோட் தான்.
படத்தில் பாராட்டுக்குரிய விஷயங்கள் என்றால் அதில் இசைக்கு முதல் இடம் கொடுக்கலாம். பின்னணி இசையை பாராட்டலாம். அறிமுக இசையமைப்பாளர் சாதிக் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுடன் இணைந்து, அறிமுக படத்திலேயே பெயர் பெற்றுத்தரும் அளவிற்கு இரண்டு பாடல்களைக் கொடுத்துள்ளார். கிராமப்புற வாழ்வியலில் உள்ள சில பழக்க வழக்கங்களை காட்சிப்படுத்தியுள்ளதை பாராட்டலாம். புகழேந்தியின் ஒளிப்பதிவு படத்தில் இருக்கும் ப்ளஸ் பாய்ண்டுகளில் ஒன்று. படத்தில் அரசியல் குறியீடுகள் சமகால அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. இது சமகால அரசியல் குறித்த இயக்குநரின் பார்வையை எடுத்துரைக்கின்றது. படத்தின் ப்ரீ க்ளைமேக்ஸ் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள், “இதைத்தான் நைட்டெல்லாம் உக்காந்து ஒட்டீட்டு இருந்தியா” என்ற டெம்ப்ளேட்டை நியாபகப்படுத்தாமல் இல்லை.

















