full screen background image
Search
Monday 20 April 2026
  • :
  • :
Latest Update

மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்

மக்களுக்கு சேவை செய்ய

நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்

சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியின்றி வாழ்பவர்கள் இந்த உலகில் மிகவும் குறைவு. அந்த குறைவானவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவர் செய்து வரும் அறம் சார்ந்த சேவைகள் எல்லாம் பலபேர்களை வாழ்வில் கரம் பிடித்து தூக்கி விட்டிருக்கிறது.

தன் அன்னைக்கு கோவில் கட்டியதோடு இல்லாமல் கடந்த அன்னையர் தினத்தன்று தாய் அமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தெய்வங்களை காக்கும் பொருட்டு சில பலமான முன்னெடுப்புகளை துவங்கியுள்ளார். அதைப்போலவே தன்னை நாடி வரும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் தான் தேடிச் சென்றும் நல்லுதவி செய்வதற்காக தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறார்.

இதைப்பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது,

“என்னுடைய ஒவ்வொரு படிகளுக்கும் அடிநாதமாக இருப்பது இளைஞர்கள் தாய்மார்கள் ஆகிய ரசிகர்களும் முக்கியமாய் குழந்தைகளும் தான். அவர்களுக்கு வெறும் நன்றி சொல்வதோடு என் கடமை முடிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஒவ்வொரு முயற்சிகளாக செய்து வருகிறேன். தற்போது தாய் அமைப்பு ஒன்றை நிறுவி இருக்கிறோம்.

மக்களுக்கு சேவை செய்ய இனி எனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் 15-நாட்கள் மக்களை நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். காஞ்சனா சீரிஸ் படங்கள் தொடர்ந்து 100 கோடிகளுக்கும் மேல் வசூல் குவிக்கிறது என்றால் அதற்கு குழந்தைகள் தான் பெரிய காரணம். அதனால் இந்த சேவையை குழந்தைகளிடம் இருந்தே துவங்க விருப்படுகிறேன். குடும்பச் சூழல் காரணமாக கல்வி கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம். மேலும் பல நல்ல யோசனைகள் உள்ளது. அவை அனைத்தையும் நடைமுறைப் படுத்த நல்லோர்கள் வாழ்த்தும் ஆண்டவன் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

இதன் துவக்கமாக கஜா புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர் கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி அதன் கிரகபிரவேசத்தை இன்று நேரில் சென்று நடத்தியுள்ளார் லாரன்ஸ்.

கொடுப்பவர்களுக்குத் தான் தெய்வம் கொடுக்கும் என்பார்கள். லாரன்ஸ் அவர்களுக்கு தெய்வம் ஒருபோதும் கொடுப்பதை நிறுத்தாது என்ற நம்பிக்கையை அவர் தொடர்ந்து பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார். வாழ்க அவரது சேவை!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *