’டி.என்.ஏ’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Casting : Atharvaa, Nimisha Sajayan, Balaji Sakthivel, Ramesh Thilak, Viji Chandrasekhar, Chetan, Riythvika, Subramaniam Siva, Karunakaran, Bose Venkat, Pasanga Sivakumar
Directed By : Nelson Venkatesan
Music By : Background Score: Ghibran Vaibodha – Original Songs: Sathyaprakash, Sreekanth Hariharan, Pravin Saivi, Sahi Siva, Anal Akash
Produced By : Olympia Movies – Jayanthi Ambethkumar, S. Ambethkumar
காதல் தோல்வியில் போதைக்கு அடிமையாகி குடும்பத்தினரால் வெறுக்கப்படுகிறார் ஆனந்த் (அதரவா). இன்னொருபக்கம் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிசார்டர் என்ற மனநலம் தொடர்பான பிரச்சினையில் இருக்கும் திவ்யா (நிமிஷா சஜயன்). போதைப் பழக்கத்திலிருந்து மீளும் ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் திருமணம் ஆகி அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியுடன் செல்கிறது. இருவருக்கும் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே மருத்துவமனையில் அந்த குழந்தை மாற்றப்படுகிறது.
மற்ற யாருக்கும் அதுகுறித்து தெரியாத நிலையில், அது தன் குழந்தை இல்லை என்று சரியாக கண்டுபிடித்து சொல்கிறார் திவ்யா. அதன் பிறகு தன் குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் ஹீரோ. குழந்தை கிடைத்ததா? அவர்களிடம் இருக்கும் குழந்தை யாருடையது போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் பதில் சொல்கிறது ‘டிஎன்ஏ’.
நமிஷாவின் உடல்மொழியும் நடிப்பும் வெகு சிறப்பு. குழந்தையை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட்டு அதர்வாவிடம் புலம்பும் அந்தக் காட்சி அமைப்பும் வசனங்களும் நடிப்பும் ‘ஆஹா’
அதர்வா நடித்து நான் திரையில் பார்க்கும் முதல் படம். பாத்திரமறிந்து நன்றாகச் செய்திருக்கிறார்.
பட்டையெல்லாம் போட்டு பரம சாதுவாக இருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்கள் என்றெண்ணி ஏமாந்து விடாதீர்கள் என்ற குறியீடு பிடித்திருந்தது. 🙂
Borderline personality disorder, போஸ்ட் பார்ட்டம் சைக்கோஸிஸ் ( வீட்ல ஒரு சைக்காலஜி இசுடூடண்ட் கிட்ட கேட்டு எழுதுனேன் 🙂 ) மாதிரி விசயங்களைத் தொட்டுச் சென்று அதை எப்படிக் கையாள வேண்டுமெனச் சொன்னதற்கு வாழ்த்துகள். .
குழந்தைத் திருட்டு குறித்த விழிப்புணர்வு, மனநல பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய விதம், குடியிலிருந்து மீள வேண்டிய அவசியமென்று பல நல்ல விசயங்களைத் தொட்டுச் செல்வது, கிப்ரானின் பின்னணி இசை, படத்தின் ஆணி வேரான வில்லன் சொல்லும் அந்த வசனம் என்று படத்தில் நிறைகள் நிறைய இருக்கின்றன.
மற்றபடி…
டாஸ்மாக் தண்ணி பாடல், ஆரம்ப காலக் காட்சிகள் எல்லாம் மலையாளப் படங்களை விடவும் கதைக்குள் நுழைய அதிக நேரம் எடுத்துக் கொண்டது போல இருந்தது. பாட்டி நுழைந்த பிறகே படம் எதை நோக்கிப் பயணிக்கிறதென்பதே புரிய வருகிறது.
‘நான் வர்ற வரை ஒண்ணும் செய்யாதே’ என்று ஏட்டையா சொல்லும்போதெல்லாம் சொல் பேச்சு கேட்காமல் கதாநாயகன் சண்டை போட்டு ஹீரோயிசம் காட்டுவதுதான் படத்திலிருக்கும் ஒரே நகைச்சுவைக் காட்சி.
குழந்தையைக் கடத்துபவர்களும் வேலை மெனக்கெட்டு ஆளில்லா கட்டடத்தில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆளில்லா கட்டட ‘டெம்ப்ளேட்’டை மாத்தவே மாட்டீங்களாடா?!
ஏட்டையாவாக வருபவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர் காவல் துறைக்கு வேலை செய்கிறாரா அதர்வாவிடம் சம்பளம் வாங்குகிறாரா என்ற குழப்பம் வேறு.
இது சீரியஸ் படமென்பதால் படத்தில் யாரும் சிரித்துவிடக் கூடாதென்பதில் கவனமாக இருந்திருப்பார்கள் போல. “என்ன இவ உருளைக்கிழங்கை இவ்வளவு பெருசா வெட்டிட்டு இருக்கா? நெசம்மாவே லூசுதான் போல” என்று முன்னிருக்கை ஆண்ட்டி சொன்ன ஜோக்கிற்கு சிரித்தார்கள் மக்கள். கூடவே, ” ‘லூசு’ன்னு சொல்லாதீங்கன்னு பாடமெடுத்தாலும் கூட ‘லூசு’ என்று சொல்லி மகிழும் இந்த மந்தைக் கூட்டங்களின் மீது கோபமும்.
அட்டகாசமாக இன்னும் பரபரவென்று நகரும் படமாக வந்திருக்க வேண்டிய படம் நரபலி, குழந்தைகளைத் திருடி பிச்சையெடுக்க வைக்கும் நெட்வொர்க் என்று எங்கெங்கோ திசை மாறியது கொஞ்சம் அயர்ச்சியைத் தந்தாலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் படத்தோடு ஒன்ற முடிந்ததில் இருக்கிறது படத்தின் வெற்றி.















