‘பேபி & பேபி’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Jai, Yogi Babu, Sathyaraj, Pragya Nagra, Sai Dhanya, Redin Kingsley, Mottai Rajendran, Anandaraj, Ilavarasu, Singampuli, Sriman, Nizhalgal Ravi, Keerthana, Papri Gosh, Ramar, Thangadurai, Sesu, Kalki Raja, Prathosh
Directed By : Prathap
Music By : D.Imman
Produced By : Yuvaraj Films
முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் பேபி & பேபி எனும் திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களை சென்றடையாத நிலையில் காதலர் தினத்தன்று பட மாளிகையில் வெளியாகி இருக்கிறது. இதற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்குமா ? கிடைக்காதா? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
கதையின் நாயகர்களான சிவா ( ஜெய்) மற்றும் குணா ( யோகி பாபு) ஆகிய இருவரும் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மற்றும் மதுரை செல்லும் விமான பயணத்தில் அவர்களுடைய உறவினர்களின் குழப்பத்தால் இருவரின் பிள்ளைகளும் மாறுகிறார்கள். இதனால் விமான பயணத்தின் போது சிவாவும், குணாவும், குழப்பம் அடைகிறார்கள். பதற்றம் அடைகிறார்கள். விமான நிலைய காவல் அதிகாரியின் விசாரணைக்குப் பிறகு இருவரது பிள்ளைகளும் இடம் மாறி விமானத்தில் பாதுகாப்பாக பயணிப்பதாக தெரிவிக்கிறார்கள். சிவாவிற்கு ஆண் குழந்தையும், குணாவிற்கு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. சிவாவின் ஆண் குழந்தை குணாவிடமும், குணாவின் பெண் குழந்தை சிவாவிடமும் மாறுகிறது.
இந்தத் தருணத்தில் சிவாவின் தந்தை சத்யராஜ் தனக்கு ஒரு பேரன் (ஆண் வாரிசு) வேண்டும் என விரும்புகிறார். சிவாவிற்கு ஆண் வாரிசு பிறந்திருப்பதால் அவரை மன்னித்து ஏற்க தயாராகிறார்.
குணாவின் தந்தை ஜோதிடத்தின் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார். பெண் பிள்ளை பிறந்தால் யோகம் உண்டு என உணர்கிறார். இந்த தருணத்தில் அவருடைய சொல்லை மீறி திருமணம் செய்து கொண்ட குணா பெண் குழந்தை பெற்றெடுத்திருப்பதால் அவரையும் மன்னித்து ஏற்றுக் கொள்ள தயாராகிறார்.
இப்படி சிவாவின் தந்தை ஆண் பிள்ளையையும், குணாவின் தந்தை பெண் பிள்ளையையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க பிள்ளைகள் இடம் மாறி இருக்க குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்திற்கு எப்படி விடை கிடைக்கிறது? என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை.
நகைச்சுவைக்கு பாரிய இடமளிக்கும் வகையிலான கதை என்றாலும் இயக்குநர் கதாபாத்திரங்களையும் , நட்சத்திர முகங்களையும் நம்பி திரை கதையை அமைத்திருப்பதால் சில இடங்களில் மட்டுமே நகைச்சுவை பலன் தருகிறது. பல இடங்களில் எரிச்சலும், சோர்வும் உண்டாகிறது.
வழக்கமான கதை என்றாலும் இப்படித்தான் செல்லும் என பார்வையாளர்கள் யூகிக்கும் வகையில் சம்பவங்கள் செல்வதால் ஒரு கட்டத்திற்கு மேல் பொழுது போக்கு அம்சங்கள் கூட சோகமாக காட்சி அளிக்கிறது.
சத்யராஜ் ,ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, போன்ற ஓய்வு பெறவேண்டிய நட்சத்திரங்கள் திரையை ஆக்கிரமித்து நகைச்சுவை என்கிற பெயரில் அடிக்கும் சேட்டைகளும், லூட்டிகளும் ஓவர்.
சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய் வருகிறார் ; நிற்கிறார் ; பேசுகிறார் ; சண்டை போடுகிறார் ; இயக்குநர் சொன்னதை செய்கிறார்.
குணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபுவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தன்னுடைய வழக்கமான ஒன்லைன் பஞ்ச்களால் அந்த கேரக்டரை சிதறடிக்கிறார்.
ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் பிரக்யா நாக்ரா ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருப்பது அவருடைய ரசிகர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
டி இமானின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறது.
படத்திற்கு வலிமை சேர்க்கும் என இயக்குநர் கருதிய நகைச்சுவையான உரையாடல்களும், உடல் மொழியிலான நகைச்சுவையும், காட்சியமைப்பிலான நகைச்சுவையும் , ரசிகர்களுக்கு சிரிப்பை தருவதற்கு பதிலாக தலைவலியை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவு , படத்தொகுப்பு ,கலை இயக்கம், என அனைத்தும் தரமாக இருந்தும் ரசிகர்களுக்கு மன நிறைவை வழங்கவில்லை என்பதுதான் மறுக்க முடியாத ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

















