சேத்துமான் திரைப்பட ரேட்டிங்: 3.5/5
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையே சேத்துமான் என்ற படமாகியிருக்கிறது. இலக்கியத்தில் இருந்து சினிமா என்பது ஓர் அற்புதமான முன்னகர்வு. அதை கன கச்சிதமாகச் செய்திருக்கிறார் இயக்குநர் தமிழ். இப்படியான தனித்துவமிக்க கதைகளை படமாக தயாரிப்பதால் தான் நீலம் புரொடக்ஷனும் பா.ரஞ்சித்தும் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள்.
பொட்டல் காட்டில், உச்சி வெயிலில் தன் தாத்தாவுடன் நடந்து செல்லும் குமரேசன், ‘பள்ளிகூடத்துல டீச்சர் என்கிட்ட, நீ எல்லா கறியும் சாப்பிடுவியா?’னு கேட்டாங்க, அதுக்கு நான் ‘எல்லாமே சாப்பிடுவேன்’னு சொன்னதும் சிரிச்சாங்க. ‘ஏன் தாத்தா கறி சாப்பிட்றது தப்பா?’ என கேட்கிறான். சமகால சாதிய, மத, அரசியலுடன் பிணைக்கப்பட்ட முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்வியை மையமாக கொண்டு அழுத்தமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது ‘சேத்துமான்’.நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில் ஊருக்கு வெளியே தனது பேரன் குமரேசன் (அஸ்வின்) உடன் வாழ்ந்து வருகிறார் பூச்சியப்பா (மாணிக்கம்). மாட்டுக்கறியை சாப்பிட்டதால் ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாய், தந்தையை இழுந்து தவிக்கும் குமரேசனுக்கு தாத்தா பூச்சியப்பாதான் எல்லாமுமே.
குமரசேனை எப்படியாவது படிக்க வைத்து, நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என ஓயாது உழைக்கிறார் பூச்சியப்பா. கூடைப் பின்னி சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கும் அவர், அந்த ஊரில் உள்ள பண்ணையாரான வெள்ளையனுக்கு (பிரசன்னா பாலசந்திரன்) உதவியாகவும் இருந்த வருகிறார். இதனிடையே வெள்ளையனும் அவரது குழுவும் இணைந்து சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட ஆசைப்படுகின்றனர். இறுதியில் அவர்களின் விருப்பத்தால் ஏற்பட்ட விபரீதம் குறித்த அழுத்தமான காட்சிகளால் யதார்த்ததுக்கு நெருக்கமான படைப்பாக உருவாகியுள்ளது ‘சேத்துமான்’.
பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் வரும் மே 27-ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கும்.
மொத்தத்தில் ‘சேத்துமான்’ படம் உணவு அரசியலையும், சாதிய கட்டுமானத்தையும் விசாரணைக்கு உட்படுத்தும் கலைப் படைப்பு.














