full screen background image
Search
Friday 7 February 2025
  • :
  • :

ஓலா, உபேர் போல் கால் டாக்ஸிகாக தமிழக அரசு பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்த வேண்டும் -சிறகுகள் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம் கோரிக்கை

ஓலா, உபேர் போல் கால் டாக்ஸிகாக தமிழக அரசு பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்த வேண்டும்.
-சிறகுகள் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம் கோரிக்கை

https://youtu.be/ckpYbvk6BVI

தமிழக நகரங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் ஓலா, உபேர் போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை போல், தமிழக அரசும் பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்தினால், அதனை அனைத்து கால்டாக்சி ஓட்டுனர்களும் ஆதரவு தருவார்கள்.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் சபரிநாதன் பேசுகையில்,“ கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த கிராம பகுதிகளுக்கு சென்று, அவர்களுக்கு தேவையான கொசுவர்த்தி சுருள், போர்வை, மின்விளக்கு, கோதுமை மாவு, வாட்டர் பாக்கெட், டார்ச்லைட் போன்ற பொருட்களை வழங்கியதுடன், அவர்களுக்கு தேவையான பாதை வசதியையும் செய்து கொடுத்தோம். அப்பகுதிகளில் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக எங்கள் ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு லட்ச ரூபாயை சேகரித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று உதவி செய்தோம்.
ஓட்டுநர்களுக்கான சங்கம், ஓட்டுநர்களுக்கான உரிமைகளை கடந்து முதன்முறையாக சமூக சேவையில் ஈடுபட்டது அந்த தருணத்தில்தான்.. இதன் மூலம் ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு நேர்மறையாயன புரிந்துணர்வை ஏற்படுத்தும் பணியின் மூலம் சிறகுகள் அமைப்பு தொடங்கப்பட்டது.
மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை ஓட்டுனரின் பங்களிப்பு இருக்கிறது. அதேபோல் மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து அத்தியாவசியமான பொருட்களிலிருந்து ஆடம்பரமான பொருட்கள் வரை, அனைத்து வகையான பொருட்களையும் அவர்களிடம் சேர்ப்பிப்பதற்கும் ஓட்டுனர்கள் பங்கு அளப்பரியது.
போக்குவரத்து காவலரின் அநாகரீகமான செயலால் பாதிக்கப்பட்ட திருமங்கலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதுதொடர்பான பிரச்சனையில் சங்கத்தின் சார்பாக சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடும்பத்தினருக்கு காவல் துறை சார்பாகவும், அரசின் சார்பாகவும் நிவாரண தொகையை பெற்று வழங்கினோம்.
தொழிலாளர் தினத்தன்று அன்னதானம், கண் தானம், மருத்துவ முகாம், கல்வி உதவித்தொகை, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளிலும் எங்கள் சிறகுகள் அமைப்பு தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.
விபத்தில்லா வாரம், விபத்தில்லா சென்னை, விபத்தில்லா தமிழகம் என பல்வேறு பொருளில் விபத்து குறித்தும், சாலை விதிகள் குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள சிக்னல்களில் நின்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து புதுமையான பாணிகளில் விளக்கமும் கொடுத்து வருகிறோம். இதன்போது போக்குவரத்து காவலர்கள் படும் சிரமங்களையும், மக்கள் பாதுகாப்பாக செல்வதற்காக அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்தும் விவரித்து வருகிறோம்.
ஓட்டுனர்களுக்கு சுயக்கட்டுப்பாடு தேவை என்பதையும் வலியுறுத்தி வருகிறோம். இதற்கு முயற்சி செய்யவேண்டும் என்பதையும், அதற்கு தொடர் பயிற்சி தேவை என்பதையும் வலியுறுத்தி வருகிறோம்.
ஆட்டோக்களுக்கு அரசு குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்து இருப்பதைப்போல் கால் டாக்ஸி களுக்கும் குறைந்தபட்ச கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்.
ஓலா, உபர் போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு 25 சதவிகிதம் கமிஷன் தொகையை அவர்களுக்கு வழங்குவதைக் காட்டிலும், தமிழக அரசே கால்டாக்சிக்கென பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கினால், அதனை நாங்கள் பதிவிறக்கம் செய்து அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவோம். இதுகுறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என்பதை இந்தத் தருணத்தில் கேட்டுக்கொள்கிறோம்.
டோல்கேட் போன்ற சுங்கச்சாவடிகளில் கால் டாக்ஸி ஓட்டுனர்களுக்காக கழிப்பறை மற்றும் ஓய்வறையை ஏற்படுத்தி தரவேண்டும். இதனை நடைமுறைபடுத்துவதில் ஏதேனும் சிக்கல் எற்பட்டால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் தற்காலிக கழிவறையை அங்கு இடம் பெறச் செய்யலாம் என்ற ஆலோசனையும் முன்வைக்கிறோம்.
அரசுக்கு எதிராகவோ அல்லது அதிகாரிகளுக்கு எதிராகவோ போராட்டத்தில் ஈடுபடாமல், கால்டாக்சி ஓட்டுநர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சட்டரீதியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.சிறகுகள் அமைப்பு அறவழியில் தன்னுடைய சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ” என்றார்.
இப்பத்திரிகையாளர் சந்திப்பில் சிறகுகள் ஓட்டுநர் சங்கத்தின் மாநில தலைவர் S .சபரிநாதன் ,மாநில பொது செயலாளர் E .வெற்றி செல்வன் ,மாநில பொருளாளர் E .ஆனந்த குமார், துணை தலைவர் D.தனபால் ,
துணை தலைவர் M .விஜயகுமார் ,கொள்கை பரப்பு செயலாளர்
M .வினோத் ,காப்பாளர் சாரதி ,ஒருங்கிணைப்பாளர் கோபி கண்ணன் நிர்வாகி ஜெகதீசன் ,இணை செயலாளர் லோகேஷ் துணை செயலாளர் ,ராஜ்குமார் நிர்வாகி குமார் கலந்து கொண்டனர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *