full screen background image
Search
Saturday 25 January 2025
  • :
  • :

சிறந்த நடிகராக அடையாளப்படுத்தப்படவேண்டும். -நடிகர் ஷான்

சிறந்த நடிகராக அடையாளப்படுத்தப்படவேண்டும். -நடிகர் ஷான்

தமிழ் சினிமாவின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது, நாடகத்துறையில் ஈடுபட்டவர்கள் தான் பிற்பாடு தமிழ்சினிமாவை தவிர்க்க முடியாத ஆளுமையாக உயர்ந்தார்கள். இன்றைய தமிழ் சினிமாவில் சின்னத்திரையின் பின்னணியிலிருந்து வருகைத்தந்த விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் தான் முன்னணி நடிகர்களாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகி, தற்போது திரைத்துறையிலும் கால்பதித்திருப்பவர் நடிகர் ஷான். ஆதிரா, வாணி ராணி,வள்ளி,மவுனராகம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் நடிகர் ஷான். அண்மையில் சென்னையில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற சிறந்த கலைஞர்களுக்கான போட்டியில் மோனோ ஆக்டிங் பிரிவில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்ற இவரை சந்தித்தோம்.

அறிமுகம் …?

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் பிறந்து,அங்குள்ள கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்தேன். குத்தாலத்தில் கல்லூரி படிப்பை தொடர்ந்தேன். பள்ளி படிப்பில் படித்துக் கொண்டிருக்கும் போதே கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. பட்டப்படிப்பு முடித்த பிறகு சென்னைக்கு வருகை தந்து, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான விரிவாக்கத் துறையில் பணியாற்றத் தொடங்கினேன். சின்னத்திரை இயக்குனர் சி. ஜே. பாஸ்கர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அதன்பிறகு அவர் இயக்கிய ஆதிரா என்ற தொடர் மூலம் நடிகராக அறிமுகமானேன்.

நடிகருக்கான தகுதியை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

நடிகராக வேண்டும்அதிலும் ஒரு நட்சத்திர நடிகராக வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டவுடன் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்து, நடிப்பின் அடிப்படைகளை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு தொடர்ச்சியாக மனிதர்களையும், வித்தியாசமான பாவணை மற்றும் உடல்மொழி கொண்டிருப்பவர்களை உற்றுக் கண்காணிக்க தொடங்கினேன். அதன் பிறகு இயக்குநர் சி.ஜே. பாஸ்கர் சொல்லிக்கொடுத்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை, பிரதிபலிப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டு நடிகராக தொடர்கிறேன்.

உங்களது பயணம்..?

ஆதிரா என்ற தொலைக்காட்சித் தொடருக்கு பிறகு, ராடான் நிறுவனம் தயாரித்த ‘வாணிராணி’ என்ற தொடரிலும் நடித்தேன். அதன் பிறகு ‘வள்ளி’ என்ற தொடரினல் இரண்டாம் நாயகனாக நடித்தேன். இதில் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட எபிசோடுகளில் நடித்தேன். இதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் என்ற தொடரில் கௌரவ தோற்றத்தில் நடித்தேன். தற்பொழுது இயக்குனர் சுப்புராம் இயக்கத்தில் விதார்த் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, பெரிய திரையிலும் அறிமுகமாகியிருக்கிறேன்.

தொலைக்காட்சித் தொடரில் முதன்முதலாக நடித்த அனுபவம் குறித்து..?

இயக்குனர் சி ஜே பாஸ்கர் இயக்கிய ஆதிரா என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்க தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் எந்த ஆடிஷனும் வைக்காமல் நேரடியாக கேரளாவில் நடைபெறும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அங்கு சென்றவுடன் தான் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கேரக்டரில் நடிக்கவேண்டும் என்று இயக்குநர் கூறினார். அதன் பிறகு படப்பிடிப்புத் தளத்தில், கெத்தா எம்எல்ஏவாக ஒப்பனை எல்லாம் செய்துகொண்டு நடிக்க தயாரானேன். முதல் நாள் என்பதால் சற்று பதற்றம் இருந்தது. இதனால் இரண்டு டேக்குகள் வீணானது. அதன்பிறகு இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும்,‘ இயல்பாக இருங்கள், பதட்டப்படாதீர்கள்.’ என்று நம்பிக்கையளித்தனர். அதன் பிறகு ஒரே டேக்கில் நடித்து படக்குழுவினரின் பாராட்டைப் பெற்றேன். அதிலும் குறிப்பாக ஒளிப்பதிவாளர்,‘ புதுமுக நடிகர் போல் இல்லை. நல்ல அனுபவமிக்க நடிகர் போல் நடிக்கிறீர்கள்.’ என்று பாராட்டினார். இது எனக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது.

உங்களின் நடிப்பை பற்றி தயாரிப்பாளரான நடிகை ராதிகா சரத்குமார் என்னச் சொன்னார்கள்?

‘வாணி ராணி’ தொடரில் எனக்கான கேரக்டரைக் கொடுத்து நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கு வருமாறு இயக்குனர் சி.ஜே.பாஸ்கர் என்னிடம் கூறினார். அங்கு சென்ற பிறகு தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் அவர்களை அறிமுகப்படுத்தினார். அவர்கள் என்னை ஒரு முறை பார்த்துவிட்டு,‘ நன்றாக நடிக்க வேண்டும். இயல்பாக நடிக்க வேண்டும். பதட்ட படக்கூடாது.’என அவருடனான காட்சியில் நடிக்கும்போது ஏராளமான பயனுள்ள விசயங்கள் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களது அனுபவத்தில், அவர்கள் கூறிய விஷயங்கள் எனக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியது. நான் ஒரு புதுமுக நடிகர் என்றாலும், அவ்வளவு அனுபவமிக்க ஒரு மூத்த நடிகை எனக்கு மரியாதை அளித்தது, எம்மை ஆச்சரியப்படுத்தியது. அத்துடன் அந்த தொடரில் மற்றொரு மூத்த நடிகையான நடிகை நளினி அவர்களின் சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அவருடன் நடித்த காட்சிகளும் மறக்கமுடியாதவை. நடிகை நளினி அவர்களின் மகன் எனக்கு தோழர். ஒரு விழாவில் நடிகை நளினி அவர்கள் விருந்தினராக வருகிறார்கள். அவர்களை சந்திக்கிறேன். அதன் பிறகு அவர்களை படப்பிடிப்பு தளத்தில், அவர்களுடைய சகோதரர் கதாபாத்திரத்தில் நடிகராக சந்திக்கிறேன். இதுவும் எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தொலைக்காட்சித் தொடர் என்றால் பிராம்டிங் எனப்படும் ஒரு விஷயம் நடக்கும். இது குறித்து உங்களது அனுபவம் என்ன?

பிராம்டிங் செய்வதும் நுட்பமான கலை தான். அதற்கு பயிற்சியும், கால அவகாசம் தேவை. தொலைக்காட்சித் தொடர்களுக்கு ஒரு கால்ஷீட்டிற்குள் இத்தனை காட்சிகளை படமாக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத நெருக்கடி இருக்கிறது. அதனால் வசனங்களை நடிகர் நடிகைகள் அதிலும் குறிப்பாக என்னைப்போன்ற புதுமுக நடிகர்களுக்கும், வளர்ந்துவரும் நடிகர்களுக்கும் மனனம் செய்து நடிக்க வேண்டும் என்றால்… அதற்கு கால அவகாசம் அதிகம் தேவைப்படும். இதனை குறைக்கும் விதத்தில் தான் ப்ராம்டிங் என்ற ஒரு கலையின் உதவி அவசியமாகிறது. இது நடிகர்களுக்கு தொடக்கத்தில் சிக்கலாக இருந்தாலும் நாட்பட நாட்பட பயிற்சியாக மாறிவிடும்.

வள்ளி தொடரில் ஏற்பட்ட அனுபவங்கள்…?

இயக்குனர் சுந்தரேசன் அவர்கள் என்னை அணுகி வள்ளி தொடர் பற்றி விளக்கினார்கள். ஒரு அப்பாவியான கேரக்டர். அதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று விவரித்தார். நாற்பது எபிசோடு வரை அதில் நடித்தேன். அதன்பின்பு மூத்த நடிகர் பாண்டு அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் படப்பிடிப்பு தளத்தில் ஏராளமான அறிவுரைகளை சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த தொடரில் அவருடைய மகனாக நடித்திருப்பேன். அதுவும் மறக்க முடியாதவை.

விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகங்கள் குறித்து…?

‘மௌன ராகம்’ தொடரின் இயக்குனர் என்னை தொடர்பு கொண்டு, இந்தத் தொடரில் கௌரவத் தோற்றம் (கெஸ்ட் ரோல் )இருக்கிறது. செய்கிறீர்களா…? என கேட்டார். நடிக்க வந்த பிறகு சிறியதோ.. பெரியதோ… எந்த வாய்ப்பு வந்தாலும், அதனை ஏற்று நடிப்பதுதான் பொருத்தமானது என்பதால், அந்த தொடரில் நடிக்க ஒப்பந்தமானேன். அந்த தொடரின் விளம்பரத்தில் நான் இடம்பெற்றிருந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

தொலைக்காட்சி மற்றும் தொலைகாட்சி தொடரின் ரசிகர்கள் குறித்து..?

ரசிகர்கள் பலர் என்னை சந்திக்கும் போதெல்லாம், தற்போதைய குடும்ப அமைப்பையும், தனிநபர் சார்ந்த குணநலன்களையும்… வடிவமைப்பதிலும், வழி காட்டுவதிலும் தொலைக்காட்சி மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றன என்ற கருத்தினை பகிர்ந்திருக்கிறார்கள். என்னை வணிக வளாகங்களில் சந்திப்பவர்கள் ‘எம்எல்ஏ’ என்றும், ‘ஹோட்டல் அதிபர்’ என்றும் நினைவுபடுத்திக் கொண்டு,நீங்கள் தொலைக்காட்சி நடிகர் தானே என்று கூறி, வாழ்த்துக்கள் சொல்லி, செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். இது எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதி சந்தோசமடைவேன். இன்றைக்கு ஏராளமான தொடர்கள்… ஏராளமான தொலைக்காட்சி… அதனால் மக்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, தொலைக்காட்சியையும் தொடர்களையும் பார்க்கிறார்கள்.

தொடர்ந்து…?

தொலைக்காட்சித் தொடர், இணையத் தொடர், பெரியதிரை என எந்த திரையில் வாய்ப்பு வந்தாலும், அது சவாலான கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களிடம் நல்ல நடிகன் என்று பெயர் எடுக்கவே விரும்புகிறேன். அதற்கான முயற்சியிலும், தேடலிலும் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *