full screen background image
Search
Friday 23 May 2025
  • :
  • :
Latest Update

Tambaram Thiruneermalai Lake polluted by MEPZ and Cognizant

திருநீர்மலை ஏரியில் கலக்கும் மெப்ஸ் மற்றும் காக்னிசண்ட் நிறுவனங்களின் கழிவுகள்

சென்னை, 22 மார்ச் 2017

உலக நீர் தினத்தன்று, “ஏரிச்சுவடுகள்” என்னும் ஆவணப் படம் வெளியாகி உள்ளது. இந்த ஏரிச்சுவடுகள் என்னும் ஆவணப் படம் திருநீர்மலை ஏரியின் தற்போதைய அவல நிலையை எடுத்துச் சொல்கிறது.

எழும்பூர், சென்னை சமூகப் பணி கல்லூரியில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவினில் அக்கல்லூரியைச் சேர்ந்த செல்வி. ராஜலக்ஷ்மி வரவேற்புரை அளித்தார். மேக்ட் நிறுவனத் தலைவரும் உயிர் நிழல் இயக்கத்தின் நிறுவனருமான திரு. த. சிரில் அலெக்சாண்டர் அவர்கள் விழாவின் தொடக்கவுரையில் திருநீர்மலை ஏரிகள் பற்றியும், ஏரிகளின் தற்போதைய நிலை பற்றியும், அவை எப்படி மாசுபடுகின்றன என்றும் விளக்கினார். பின்னர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்களால் “எரிச்சுவடுகள்” என்னும் ஆவணப் படம் வெளியிடப்பட்டது.

இந்த ஆவணப் படம் தாம்பரம் சானடோரியம் மெப்ஸ், காக்னிசண்ட், அரசு மருத்துவமனை, நெஞ்சக நோய் மருத்துவமனை, தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் – இவை அனைத்தும் வளமிக்க திருநீர்மலை ஏரிகளை தங்கள் கழிவுகளால் எப்படி மாசுபடுத்துகின்றன என்று விளக்கியது.

மெப்ஸ் நிறுவனத்திற்கென இரண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உபயோகத்தில் உள்ளன. அவற்றில் சிறிய சுத்திகரிப்பு நிலையம் காக்னிசண்ட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கழிவு நீரை சுத்திகரித்து அதை மறு உபயோகத்திற்கு அனுப்பும் அந்த சுத்திகரிப்பு நிலையமானது 2014 ல் இருந்து இயக்கத்தில் இல்லை. பெரிய சுத்திகரிப்பு நிலையம் 30 சதவிகிதம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது, இதை கண்டு கொள்ளாத மெப்ஸ் மற்றும் காக்னிசண்ட் நிறுவனத்தார், கழிவு நீரை நேரடியாக திருநீர்மலை ஏரியில் கலக்ககின்றனர்.

ஏரியின் அருகே வசிக்கும் தமிழ் நாட்டு வீட்டு வசதி வாரிய மக்களுக்கு மனிதக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் BIOGAS திட்டம் 2007 முதல் செயல்பாட்டில் இருந்தது. BIOGAS திட்டம் என்பது மனிதக் கழிவுகளில் உள்ள மீத்தேன் வாயு மற்றும் கரியமிலவாயுவைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதாகும். இப்போது BIOGAS திட்டமும் செயல்படவில்லை. இந்த மக்களின் கழிவும் திருநீர்மலை ஏரியில் தான் கலக்கின்றது.

தாம்பரம் சானடோரியம் அரசு மருத்துவமனையும், நெஞ்சக நோய் மருத்துவமனையும் தங்களது மனிதக் கழிவுகள், அபாயம் விளைவிக்கும் மருந்துக் கழிவுகளை இந்த ஏரியில் கலந்து இதைக் கழிவு நீர்க் குட்டையாக மாற்றி வருவது வேதனை. அரசுத் துறைகள் கண்டு கொள்ளாத இந்த பிரச்சனைகளுக்காக இந்த சமூக மக்கள் போராடி வேதனையில் உழல்வதை இந்த ஆவணப் படம் எடுத்து இயம்புகிறது.

எனவே, திருநீர்மலை ஏரிகளை பாதுகாக்க திருநீர்மலை ஏரி மற்றும் வீரராகவன் ஏரியில் கலக்கும் கழிவுகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். இந்த ஏரிகள் சுத்திகரிக்கப்பட்டு மறு பயன்பாட்டிற்கு, முக்கியமாக மக்களின் நீர்த் தேவைக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப் பட வேண்டும். ஏரிகளின் ஆக்கிரமிப்புகள் உடனடியாக தடுத்து நிறுத்தப் பட்டு மேலும் ஆக்கிரமிப்புகள் தொடராமல் தடுக்க வேண்டும். இந்த ஏரிகளின் சீர்கேட்டிற்குக் காரணமான MEPZ, COGNIZANT,தாம்பரம் சானடோரியம் அரசு மருத்துவமனை,TB HOSPITAL – இவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். திருநீர்மலை ஏரியை மாசுபடுத்திய COGNIZANT நிறுவனத்தாரின் செயலை கண்டிக்காமலும், தடை செய்யாமலும் அனுமதி அளித்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவித சமூக அக்கறையும் இன்றி பல ஆண்டுகளாக தங்களது கழிவு நீரை ஏரியில் கலந்த COGNIZANTன் அனைத்து CSR சமூகப் பங்களிப்பு நடவடிக்கைகளும் தடை செய்யப் பட வேண்டும். COGNIZANT போன்ற பொறுப்பற்ற தனியார் நிறுவனங்களுக்கு சுத்திகரிக்கும் ஆலையின் நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கக் கூடாது. ஏரியில் கலந்த கழிவுகளுக்கு பொறுப்பேற்று, COGNIZANT நிறுவனத்தார் திருநீர்மலை ஏரியை முழுவதும் தூர்வாரி சுத்திகரித்துத் தர வேண்டும்..தமிழ் நாட்டு வீட்டு வசதி வாரியத்தில் அமைக்கப்பட்ட BIOGAS திட்டம் சீர் செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட வேண்டும். நீர் வரும் பாதைகளை தடுத்துக் கட்டப்பட்டிருக்கும் “JAIN ALPINE MEADOWS”ன் வழியாக நீர் வரும் பாதையை மீட்டு விவசாயிகளுக்கு நீர் வருவதை உறுதி செய்ய வேண்டும்.”மருத்துவக் கழிவுகள்” மற்றும் “மனிதக் கழிவுகளை” வீரராகவன் ஏரியில் கலப்பதை தாம்பரம் சானடோரியம் மருத்துவமனை மற்றும் நெஞ்சக நோய் மருத்துவமனை கை விட அரசாணை பிறப்பிக்க வேண்டும். மருத்துவக் கழிவுகளை அகற்ற மாநில அரசு மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் “TREATMENT PLANT”ஒன்றை இந்த இரு மருத்துவமனைகளுக்கும் நிறுவித் தர வேண்டும். ஏரியை சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு “SEPTIC TANK” வசதியுடன் கூடிய வீடுகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்க வேண்டும்.திருநீர்மலை முழுவதுமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் முடிந்தது ஆவணப் படம்.

திருநீர்மலைப் பகுதியைச் சார்ந்த திரு. ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர், திரு. சேகர், ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர், திரு. மணிமாறன் அனைவரும் திருநீர்மலை ஏரிகள் குறித்த தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நீர்நிலைகள் குறித்த கருத்துகளையும் செய்திகளையும் பகிர்ந்து கொண்டு, ஏரிகளை பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் கூறினார்.

திருமதி. சௌமியா அன்புமணி அவர்களுக்கும், சென்னை சமூகப் பணி கல்லூரிப் பேராசிரியைக்கும், திருநீர்மலை தொகுதி வாழ் மக்களுக்கும், ஆவணப் படம் தயாரிக்க உதவியர்களுக்கும், நினைவுப் பரிசுகள் வழங்கப் பட்டன. சென்னை சமூகப் பணி கல்லூரியைச் சேர்ந்த செல்வன். வினோத் குமாரின் நன்றியுரையோடு விழா நிறைவடைந்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *