full screen background image
Search
Saturday 18 January 2025
  • :
  • :

Vedigundu Pasangge Audio Launch News & Photos

Vedigundu Pasangge Audio Launch News & Photos

“ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்”சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்”சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”.

முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தை பெண் இயக்குநரான Dr.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். “டோரா”, “குலேபகாவலி” படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். பி. சிதம்பரம் ஒளிப்பதிவாளராகவும், ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் நாசர், சதீஷ், பிருத்விராஜ், நடிகை மானு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் நடிகர் நாசர் பேசும் போது,

“வெடிகுண்டு பசங்க’ படத்தின் வரவு அவசியமான ஒன்று. மலேசிய வாழ் தமிழர்கள் எப்போதுமே, தமிழ்த் திரையுலகினருக்கு பெரும் பலமாகவும், முதுகெலும்பாகவும் விளங்குபவர்கள். இசை, ஓவியம், நாட்டியம் என எத்தனை கலைகள் இருந்தாலும், சினிமாவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள். சினிமா தான் மலேசிய தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் தொப்புள்கொடியாக இருக்கிறது. அங்கிருந்து இது போல இன்னும் நிறைய திரைப்படங்கள் இங்கு வர வேண்டும். முக்கியமாக அவையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், அங்கிருக்கும் வாழ்வியலை பிரதிபலிப்பவையாகவும் இருக்க வேண்டும். இங்கிருக்கிற கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்து உருவாகிற தமிழ் சினிமாக்களைப் பார்த்து தயவுசெய்து, படம் செய்யாதீர்கள். உங்களுடைய கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்த படங்களை உருவாக்குங்கள். அதைப் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம்.

முழுக்க முழுக்க தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே, இந்திய எல்லைக்குள்ளேயே எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் எல்லாம், உலகம் முழுக்க பல மூலைகளில் திரையிடப்படும் போது, ஏன் அங்கே உருவாகிற படங்களை தமிழகத்தில் வெளியிடக் கூடாது? என்கிற கேள்வி எனக்குள் இருந்து வந்தது. பல முறை நான் சிங்கப்பூர், மலேசியா செல்லும் போதெல்லாம் அங்கிருக்கிற தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் விவாதிப்பேன். அதற்கெல்லாம் விடையாக இந்த “வெடிகுண்டு பசங்க” வந்திருக்கிறது.” என்று பேசினார்.

பின்னர் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ்,

“அவ்வளவு பெரிய ஆஸ்ட்ரோ நிறுவனம், ஜனனி பாலுவை நம்பி இந்த “வெடிகுண்டு பசங்க”படத்தை ஒப்படைத்திருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. இப்படத்தின் கதாநாயகன் தினேஷ் குமார் எனக்கு வராத ஒன்றை மிகவும் நன்றாக செய்திருக்கிறார், அது தான் நடனமாடுவது. இசையமைப்பாளர் விவேக் மெர்வினின் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாடல்களே படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது. முன்னதாக நாசர் சொன்னது போல, மலேசியாவில் உள்ள வாழ்வியலை ஒட்டியே படமாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அது கலைப்படமாக அமைந்து விடக் கூடாது. பொழுதுபோக்கிற்கான அம்சங்களுடன் இருக்கும் போது நிச்சயம் ரசிகர்கள் விரும்புவார்கள்.

இங்கு தலைப்பு பதிவு செய்வதில் உள்ள சிக்கல்களைப் பற்றி பேசினார்கள். முறையாக பதிவு செய்யப்பட்ட தலைப்புகளை நோட்டீஸ் போர்டில் வெளிப்படையாக போட வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் தலைப்பு விசயத்தில் நடக்கிற கமிஷன் சமாச்சாரங்களைக் கட்டுப்படுத்தலாம்.

இப்போதிருக்கும் சினிமா சூழலில் நூறு நாட்கள் ஓடுவது என்பது சாத்தியமில்லை. திருட்டு விசிடி, இணையத் திருட்டு போன்றவற்றைத் தாண்டியும், படம் தரமானதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வெற்றி பெறும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது தொழில்நுட்ப ரீதியாக தரமான படைப்பாகவே இருக்கிறது. எனவே இந்த “வெடிகுண்டு பசங்க” வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்று பேசினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *