full screen background image
Search
Wednesday 11 February 2026
  • :
  • :
Latest Update

“அருவி” திரைப்படத்தில் நான் படம் முழுவதும் வருகிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் – திருநங்கை அஞ்சலி

பொதுவாக திரைப்படத்தில் திருநங்கைகளை கேலி கதாபாத்திரமாக தான் வைத்திருப்பார்கள் , ஆனால் அருவி திரைப்படத்தில் நான் படம் முழுவதும் வருகிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் – திருநங்கை அஞ்சலி

நானும் ( திருநங்கை அஞ்சலி) இன்னொரு திருநங்கையும் சென்றிருந்தோம் அருவி திரைப்படத்தின் நடிகர் – நடிகையர் தேர்வுக்கு சென்றிருந்தோம் . இருவரையும் நடித்து காட்ட சொன்னார்கள் நடித்து காட்டினோம். ஒரு மாதம் கழித்து நீங்கள் தான் இந்த படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளீர்கள் என்று சொன்னார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது அதே சமயம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒவ்வொரு மாதமாக என் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றது போல் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். பட பிடிப்பு தளத்தில் நான் திருநங்கை என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரும் நட்பாக பழகினார்கள். சில காட்சிகளில் எனக்கு நடிப்பு வரவில்லை அதை இயக்குநர் ஒரு முறைக்கு பத்து முறை முயற்சி பண்ணுங்கள் என்று தட்டி கொடுத்தார். கேரளா போன்ற வெளியிடங்களிலும் பட பிடிப்பு நடந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் கதாநாயகி என்னை சகமனுஷியாக நினைத்து என்னிடம் ரொம்ப அன்பாக பழகினார். இந்த படத்தில் நான் எமிலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றேன்.

இயக்குநர் என் கதாப்பாத்திரம் பற்றி கூறும் போது வித்தியாசமாக தான் இருந்தது. எனக்கும் நடிப்புக்கும் சம்பந்தமே இல்லை ஆனால் எப்படி தேர்வாகினேன் என்று தெரியவில்லை. இந்த கதாப்பாத்திரம் கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம் திருநங்கை என்ற பாகுபாடு இல்லாமல் படம் முழுவதும் வருவது போல் காட்சி உள்ளது. ஒரு பெண்ணோடு என்னையும் சேர்த்து ஒரு கதாப்பாத்திரமாக தான் கொண்டு வந்தார்கள். ஒரு திருநங்கையும், ஒரு பெண்ணும் எப்படி நட்பு ரீதியாக பழகிக்கொள்கிறார்கள் தன்னுடைய சந்தோஷம், துக்கம் என எல்லாவற்றையும் எப்படி பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற விஷயம் இருக்கும். பொதுவா திருநங்கைகள் பற்றி பல திரைப்படங்களில் கேலி கதாபாத்திரமாக வைத்திருப்பார்கள் ஆனால் அருவி திரைப்படத்தில் படம் முழுவதும் வருவது போல் இருக்கிறது இதற்கு முன்பு எந்த திருநங்கையும் படம் முழுவதும் வந்தது இல்லை. இந்த சமூகம் எங்களை புறம் தள்ளுகின்றது ஆனால் நாங்கள் இந்த சமூகத்துடன் ஒன்ற வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். சிலர் எங்களை கேலி, கிண்டல் செய்தாலும் ஒரு சிலர் எங்களை ஆதரிக்கின்றனர். திருநங்கைகளின் நடவடிக்கை அவர்கள் வாழும் சூழல் பொறுத்தது. எனக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி எனக்கு சகோதரியாகவும்,தோழியாகவும் தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை பொன்னி உள்ளார். அவர் தான் எனக்கு பரத நாட்டிய குரு. பரத நாட்டியம் கீழ் தட்டு மக்களுக்கு எட்டாத கனியாக இருப்பதினால் அணைத்து தரப்பினருக்கும் சென்று அடைய வேண்டும் என்பதற்காக வியாசர்பாடி பகுதியில் பரதம் கற்று கொடுத்து கொண்டு இருக்கின்றோம். வீணை கற்றுள்ளேன் அதையும் மற்றவர்களுக்கு கற்று கொடுக்கின்றேன். மேலும் கை வினை பொருளும் செய்து அதனை வியாபாரம் செய்வதன் மூலம் எங்களுக்கு வருமானம் வருகிறது. அருவி படம் தான் என் முதல் படம் அதனை தொடர்ந்து பட வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அருவியில் என்னை திருநங்கையாகவே நினைக்க வேண்டாம் கதாநாயகியின் தோழியாகவே வருவேன். நங்கள் இருவரும் சேர்ந்து எப்படி எங்களுடைய வாழ்கை சூழலை கொண்டு போறோம் என்பதையே காட்டியுள்ளார்களே தவிர என்னை திருநங்கையாக சுட்டிக்காட்டவே இல்லை. ஆனால் நான் திருநங்கை என்பதனால் இதை சுட்டிக்காட்டுகின்றேன். _ திருநங்கை அஞ்சலி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *