வடசென்னை மக்களை கௌரவித்த ‘வாண்டு’ இயக்குநர் வாசன் ஷாஜி
சமுத்திரக்கனி :
பேசும்போது, சினிமா பின்னணி இல்லாமல் ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். வாசன் ஷாஜியும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களது கடின உழைப்பால் இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். வடசென்னை மக்கள் தான் இம்மண்ணின் மைந்தர்கள். இப்படத்தின் டிரெய்லர் பார்க்கும்போது கோலிசோடா படம்தான் நினைவுக்கு வருகிறது என்றார்.
எஸ்.ஆர்.குணா:
வாய்ப்பு உன்னைத் தேடி வராது. நீதான் அதை உருவாக்க வேண்டும் என்ற கருத்தோடு அனைவரும் இப்படத்திற்காக பணியாற்றினோம் என்றார் எஸ்.ஆர்.குணா.
ஷிகா:
என்னைச் சேரி பெண்ணாகவே மாற்றிவிட்டார் இயக்குநர் வாசன் ஷாஜி. ஒரு சேரியில் வசிக்கும் பெண் எப்படி பேச வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும் என்று ஒவ்வொன்றையும் இயக்குநர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். இப்படம் நடிப்பதற்கு எனது அப்பா உறுதுணையாக இருந்தார். மேலும், சென்னைக்குப் புதிதாக வந்ததால் மதி அண்ணா தன் குடும்பத்தில் ஒருவராக என்னைப் பார்த்துக் கொண்டார். பணத்திற்காக அல்லாமல் இப்படம் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கோடு அனைவரும் பணியாற்றியிருக்கிறார்கள் என்று இப்படத்தின் கதாநாயகி ஷிகா கூறினார்.
ரிஷி ரித்விக்:
வாசன் ஷாஜி என்னுடைய நெருங்கிய நண்பர். அட்டு படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியபோதே எனக்கு நெருக்கமான நண்பராகிவிட்டார் என்றார் ரிஷிரித்விக்.
பாக்யஸ்ரீ:
இரவு பகல் பாராமல் வடசென்னையில் படப்பிடிப்பு நடத்தினார் இயக்குநர். இப்படி ஒரு கதாபாத்திரம் கொடுத்த வாசன் ஷாஜிக்கு மிக்க நன்றி. இப்படத்தில் நடித்து விட்டு வீட்டிற்குச் சென்றால் வடசென்னை பாஷைதான் வரும் என்று பாக்யஸ்ரீ கூறினார்.
ஆர்.ஆர். பிலிம்ஸ்-ன் நிர்வாகி R.R. வெங்கட் :
என் நண்பன் வாசன் ஷாஜி வென்றுவிட்டார். பண பரிவர்த்தனை சரியாக நடைபெறாததால் அவருடன் நான் தோற்றுவிட்டேன். இருப்பினும் இப்படம் தேசியவிருது பெறும் என்று கூறினார் ஆர்.ஆர். பிலிம்ஸ்-ன் நிர்வாகி.
‘டத்தோ’ ஷண்முகம் ராமசாமி :
பேசுகையில் இப்படம் யதார்த்தமான படமல்ல உண்மை சம்பவம் என்றார்.
ஆல்வின் :
பேசும்போது இயக்குநர் வாசன்ஷாஜி எனக்கு அப்பா மாதிரி இருந்து இப்படத்தில் நடிப்பதற்கு ஊக்குவித்தார் என்றார்.
மகாகாந்தி :
பேசும்போது எனக்கு சினிமாவைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், சினிமாவில் 20 வருடமாக வாசன் ஷாஜியை தெரியும். மிகவும் நல்ல மனிதர். அவர் தோற்றுவிட்டால் உலகமே தோற்றுவிட்டது போலத்தான் என்று கூறினார்.
சாய் தீனா :
பேசுகையில், ஒரு தடாகத்தில் மீன் எப்படி தானும் உண்டு குளத்தையும் சுத்தம் செய்கிறதோ அதைப்போல வடசென்னை மக்கள் தன்னுடைய தேவைகளை அங்கேயே பூர்த்தி செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். நானும் அங்குதான் வசிக்கிறேன். நாளைய வாழ்க்கையைப் பற்றிக் கவலையில்லாத மக்கள். அந்த மக்களை கௌரவிக்கும் விதமாக வாண்டு படத்தை இயக்கிய வாசன்ஷாஜிக்கு நன்றி என்றார்.
மோகன்ராஜ் :
பேசும்போது, மற்ற படங்களில் பாடல்கள் எழுதுவதைவிட, நெருங்கிய நண்பன் படத்திற்கு பாடல்கள் எழுதுவது அலாதி இன்பம். தண்ணீரால் மூன்றாம் உலகப்போர் வருமோ வராதோ தெரியாது. ஆனால் குப்பையால் நிச்சயம் மூன்றாம் உலகப்போர் நிகழும். அந்த அளவிற்கு குப்பைகள் பெருகிவருகின்றது என்றார்.
அபிசரவணன் :
பேசும்போது நான் சிகப்பாக இருக்கும் காரணத்தால் இப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன்முறையாக நிறத்திற்காக படவாய்ப்பு தவறியதற்காக வருந்துகிறேன் என்றார்.
கானா பாலா :
பேசுகையில் இப்படம் மிகவும் கடினமான படம். குப்பை மேட்டில் 1 மணிநேரம் சென்றுவிட்டு வந்தால் 10-15 நாட்களுக்கு நாற்றம் போகாது. ஆனால், அந்த இடத்தில் பாடலும், அதற்கான நடனமும் அமைத்திருக்கிறது மிகவும் வியப்பாக இருக்கிறது. அதற்காக வடசென்னை சார்பாக படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கத்தின் தூய்மை இந்தியா வுக்காக நான்தான் பாடல் எழுதிக் கொடுத்தேன்.
கஞ்சா கருப்பு :
பேசும்போது ராம் படத்திலிருந்தே ஷாஜியை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவர் கடின உழைப்பாளி என்றார்.
ஏ.ஆர்.நேசன்:
இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் மோகன்ராஜ் எழுதியிருக்கிறார். கானா பாலா பாடியிருக்கிறார். வடசென்னையில் 6 மாத காலம் தங்கியிருந்த அம்மக்களின் பழக்க வழக்கங்கள், பேசும் மொழி, வாழ்க்கை முறைகள் என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் கவனித்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். வழக்கமாக சேரி என்றால் குத்துப்பாட்டு தான் இருக்கும். ஆனால், அப்படியில்லாமல் அங்கு வெஸ்டர்ன் பாடல் போடச் சொன்னார்கள். நான் இசையமைத்துக் கொடுத்த உடனேயே அதைக் கேட்ட மோகன்ராஜ் இரண்டு மணி நேரத்திலேயே பாடல் எழுதிக் கொடுத்தார். வடசென்னையின் இப்போது உள்ள நிலைமையை அப்படியே தனது பாடல் வரிகளில் பதிவு செய்திருக்கிறார் பாடலாசிரியர் மோகன்ராஜ். இவ்வாறு இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.நேசன் பேசினார்.
விக்னேஷ்:
இயக்குநர் வாசன் ஷாஜி அனைத்திற்கும் சமாதானம் ஆவார். ஆனால் சினிமாவில் மட்டும் சமாதானம் ஆகமாட்டார். உதவி இயக்குனர்களுக்காக அவர் வீட்டிற்குக் கூட போகாமல் அலுவலகத்திலேயே தான் தங்குவார் என்றார் இப்படத்தின் அசோசியேட் இயக்குநர் விக்னேஷ்.
மேலும், பாலு மதி மற்றும் ஓம்பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துக் கூறினர்.
இறுதியாக, வாசன்ஷாஜி அனைவருக்கும் நன்றி கூறினார்.