‘கங்குவா’ திரைபட ரேட்டிங்: 3/5
Casting : Suriya, Bobby Deol, Disha Patani, Yogi Babu, Redin Kingsley, Natty Nataraj, Kovai Sarala, K.S. Ravikumar, Bose Venkat, Karunas, Prem Kumar
Directed By : Siva
Music By : Devi Sri Prasad
Produced By : Studio Green and UV Creations – K.E. Gnanavelraja | Vamsi-Pramod
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா முதன்முறையாக நடித்துள்ள படம் கங்குவா. கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் சுமார் 2 ஆண்டு உழைப்புக்கு பின் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அதில் நிகழ்கால காட்சிகளில் வரும் சூர்யா பிரான்சிஸ் என்கிற கதாபாத்திரத்திலும், வரலாற்று காட்சிகளில் வரும் சூர்யா, கங்குவா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோயின் திஷா பதானி நடித்துள்ளார்.
கி.பி 1070-ல் ஐந்தீவுகளில் ஒன்றான பெருமாச்சியின் இளவரசனாகவும் மக்களைக் காக்கும் வீரனாகவும் இருக்கிறான் கங்குவா (சூர்யா). 25,000 வீரர்களைக் கொண்ட ரோமானிய படை, பெருமாச்சி மீது போர் தொடுக்கவருகிறது. அவர்களுக்கு உதவும் கொடுவன் (நட்டி) உயிரிழந்துவிட, அவரது மகனை (சேயோன்) பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கிறார் கங்குவா. இதற்கிடையில் பெருமாச்சி மீது பெரும்பகை கொண்ட அரத்தி தீவின் அரசன் உதிரன் (பாபி தியோல்) பெருமாச்சியை அழிக்க ரோமானியருடன் கைகோக்கிறான். பெருமாச்சிக்கும் அரத்திக்குமான போரில் வென்றது யார்? கங்குவாவுக்கு என்ன ஆகிறது? இதற்கும் நிகழ்கால ஃபிரான்சிஸ் – ஸெட்டாவுக்கும் என்ன தொடர்பு? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.
மாஸ் நட்சத்திரங்களை வைத்து சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த படங்களை தந்த இயக்குநர் சிவா, இதில் பீரியட் கதையுடன் களமிறங்கி இருக்கிறார். 2024, 1070 என 2 காலகட்டங்களில் நடக்கும் கதைகளை இணைத்து, நான் லீனியர் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தீவுகளில் வாழ்ந்த தமிழ் தொல்குடிச் சமூகங்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் முயற்சியை பாராட்டலாம். அ
1070-ம் ஆண்டுக்கு கதை நகர்ந்த பிறகு, ஐந்தீவுகளின் அறிமுகம், அவற்றின் அமைப்பு, கதாபாத்திர வடிவமைப்பு, படையெடுத்துவரும் வீரர்கள், சதி, துரோகம் என அடுத்தடுத்த காட்சிகள் திரையுடன் ஒன்ற வைக்கின்றன. நாயகன் கங்குவா கதாபாத்திரத்தின் வழியாக தமிழ்த் தொல்குடிகள் வீரம் மட்டுமல்ல மன்னிப்பு, சத்தியம் தவறாமை, தியாகம் போன்ற குணங்களுடன் திகழ்ந்தார்கள் என்பதைப் பதிவுசெய்திருப்பது சிறப்பு.
ஆனால் கங்குவாவின் பின்னணி, அவருக்கும் அந்தச் சிறுவனுக்குமான உணர்வு பூர்வமான தருணங்கள் ஆகியவற்றுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கப் பட்டிருந்தால் இந்தக் காட்சிகள் உரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். விதவிதமான லொகேஷன்களில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளுக்கே திரைக்கதையின் பெரும்பகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சண்டை வடிவமைப்பில் புதுமையும் பிரம்மாண்டமும் சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.
பெருமாச்சியின் பெண்கள், எதிரிகளை வீழ்த்தும் ஆக்ஷன் காட்சி கவர்கிறது. இறுதியில் ஒரு முன்னணி நடிகரின் அறிமுகத்துடன் 2-ம் பாகத்துக்கு கொடுக்கப்படும் முன்னறிவிப்பு ஆச்சரியம் தந்தாலும் அதற்கு முந்தைய காட்சிகள் அளித்த ஆயாசமே அங்கும் தலைதூக்குகிறது. கங்குவாவாக சூர்யாவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. உணர்வுபூர்வமான நடிப்பிலும் அனுபவ முத்திரையைப் பதிக்கிறார். பாபி தியோலுக்கான வில்லன் கதாபாத்திரம் வலுவில்லாததாக இருந்தாலும் அவரது தோற்றமும் உடல்மொழியும் அச்சுறுத்தத் தவறவில்லை. இருவேறு கதாபாத்திரங்களில் சிறுவன் சேயோன் அழகான நடிப்பைத் தந்திருக்கிறார். கருணாஸ், பி.எஸ்.அவினாஷ், கலைராணி, போஸ் வெங்கட், நட்டி, வசுந்தரா, வருண், கயல் தேவராஜ் என பலர் தாங்கள் ஏற்ற பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த ‘கங்குவா’ தமிழில் எடுக்கப்பட்ட மற்றும் ஒரு அடுத்தகட்ட முயற்சி!



























