‘திருவின் குரல்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் விஷயத்தை வைத்து கிரைம் ஆக் ஷன் திரில்லர் படமாக வந்துள்ளது திருவின் குரல். அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் பிரபு இயக்கி உள்ளார். ஓரளவு காது கேட்கும் வாய் பேச முடியாத இளைஞன் திரு (அருள்நிதி) அத்தை பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
திடீரென அப்பா மாரிமுத்துவிற்கு விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அந்த மருத்துவமனையில் இருக்கும் கடைநிலை ஊழியர்களான நால்வர் திரைமறைவில் பல்வேறு கொலை, கொள்ளை போன்ற வேலைகளை செய்கிறார்கள். திரு வீட்டு பெண்களிடம் தவறான பாலியல் கண்ணோடத்துடன் பார்க்கிறார்கள். இதனால் திரு இவர்களை அடிக்கிறார்.
இந்த நால்வரும் செய்யும் ஒரு கொலையை திருவின் அக்காவின் மகள் பார்த்துவிட, இந்த பெண்ணையும் கொலை செய்ய முயற்சி செய்கிறது இந்த டீம். திருவை திசை திருப்பவும், பழி வாங்கவும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள திருவின் அப்பாவிற்கு தவறான மருந்துகள் செலுத்தி திருவை பாடாய்படுத்துகிறார்கள்.
இறுதியில் இந்த பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவதுதான் கிளைமாக்ஸாக உள்ளது. பெரும்பான்மையான காட்சிகள் மருத்துவமனைக்குள் எடுக்கப்பட்ட ஆக் ஷன் ட்ராமாவாக உள்ளது. படத்தின் முதல் பாதி விறுவிறு ப்பாக செல்கிறது. இரண்டாவது பாதியில் படம் வேகம் குறைந்து சண்டை காட்சிகளுடன் சாதாரண படம் போல முடிகிறது. அருள்நிதியின் வாய் பேச முடியாத கேரக்டரை வைத்து பல்வேறு விஷங்களை செய்து இருக்கலாம் டைரக்டர். ஆனால். செய்யவில்லை.
சாம். C. S. இசை மற்ற படங்களில் இருப்பது போலவே உள்ளது. சிண்டோவின் ஒளிப்பதிவு பரபரப்பை கூட்டுகிறது. கிரிமினல்கள் ஏன் இந்த குற்றங்களை செய்கிறார்கள் என்ற எந்த விளக்கமும் சரியாக படத்தில் இல்லை. வாய் பேச முடியாத ரோலில் அருள்நிதி அற்புதமாக நடித்துள்ளார். பாரதிராஜாவின் நடிப்பு நம் வீட்டு பெரியவர்களை நினைவுபடுத்துகிறது. லிப்ட் ஆபரேட்டராக வரும் ஆஷிக்கின் நடிப்பு மிரட்டல். கண்களால் பயமுறுத்துகிறார். சரியான திரைக்கதை அமைத்திருந்தால் திருவின் குரல் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த ‘திருவின் குரல்’ – எல்லோருக்கும் போய் சேர்ந்ததா என்று தெரியவில்லை




















